Friday, August 21, 2009

இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!!!!!!!!













இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாடு இலங்கை. சிங்கள பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில் ஹிந்துக்களும், கிறிஸ்த்தவர்களும் கூட சிறுபான்மையினரே.

அண்மையில் பேருவளை பள்ளிவாசல் எரிப்பும் அத்தோடு இடம்பெற்ற படுகொலை தொடர்பான துக்ககரமான செய்தியும் எல்லோரும் அறிந்ததே!

இந்த துக்ககரமான, இலங்கை முஸ்லிம்களை தலைகுனிய வைக்கும் நிகழ்வின் பின்னணியில் பெரியதொரு சதி இருப்பதை எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இந்த நிகழ்வு இடம்பெற முன் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி இலங்கையில் மதங்களுக்கிடையிலான ஒரு மோதலை உருவாக்கவே ஒட்டப்பட்டது.

நல்லவேளை, பேருவளை சம்பவத்தோடு இரண்டு உயிர்களைப் பலியெடுத்து தமிழ்நாடு தௌஹீத் பிரசாரம் நின்றுபோனது.

என்றுமில்லாதவாறு இனவாதம் அதிகரித்து வரும் காலகட்டத்தில் சிங்களத்திலும், தமிழிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டி ஏனைய மதத்தினருக்கு ஒரு சவாலாக இஸ்லாத்தை முன்வைப்பது போன்றதொரு தொனியை உருவாக்கியிருந்தது.

இதுதான் அந்த சுவரொட்டி

“ இலங்கையில் முதல் தடவையாக பகிரங்க பிரசார மேடை!

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை!

கீழே தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் இலங்கை என்று பெயரிடப்பட்டிருந்தது.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் விடுக்கும் செய்தி!! என்ற வாசகங்களோடு கொழும்பிலும் ஏனைய புற நகர் பகுதிகளிலும் மிகவும் திட்டமிட்டு இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

சுவரொட்டியில் இந்த தஃவா மேடை(?) இடம்பெறும் நாளோ இடமோ குறிபிடப்பட்டிருக்கவில்லை. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் வெளிவந்த சிவப்பு நிறத்திலான சுவரொட்டியில் நாளும், இடமும் குறிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தஃவா(?) வரலாற்றில் முதல் தடவையாக இத்தகைய தஃவா மேடை அமைவதாகவும் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் சஊதி பணத்தில் உயிர் காக்கும் இந்த தஃவாக் இயக்கங்களின் நாய்ச் சண்டையால் நாடே நாறிக்கொண்டிருக்கும் போது...

முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி பிரிந்து சிதறிப்போயிருக்கும் போது அவசரமாக சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா (?) தேவைப்பட்டது? அதுவும் இநத தஃவாவை முன்னெடுப்பவர்கள் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்தினர்.

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்திற்கு சிங்கள மக்களுக்கு இஸ்லாத்தைப் போதிக்க ஏன் அவசியம் வந்தது?

தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஹிந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லி விட்டு அவர்கள் இலங்கைக்கு வந்து விட்டார்களா?

இந்த சுவரொட்டி கூறும் செய்தி என்ன? செய்யப்போகும் தஃவாவின் பின்னணி என்ன?

இலங்கைப் போன்றதொரு பல்லின சமூகங்கள் , பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தைத் தரப்போகிறது?

சஊதி வஹ்ஹாபிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கொலைக்களம் ஒன்றை வடிவமைத்து வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

சிங்கள மக்களை சீறியெழ வைத்து, சீண்டிப்பார்த்து இலங்கையை இன்னுமொரு ரணகளத்திற்கு அழைத்துச் செல்லும் இது ஒரு சர்வதேச சதியைத் தவிர வேறில்லை.

ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை சஊதி ஊடாக அரங்கேற்ற ஆயத்தங்கள் நடைபெறுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தன்க்கு இஸ்லாம் புரியாமல் அதன் அடிப்படை தெரியாமல் நாளுக்கு ஒரு முடிவை மாற்றி நேற்று சொன்னதை இன்று வாபஸ் வாங்குதும், இன்று சொல்வதை நாளை வாபஸ் வாங்குவதுமாக புத்தி பேதலித்து திரிகின்ற பைத்தியங்களால் முஸ்லிம் சமூகமே திக்குத்தெரியாமல் தட்டுத்தடுமாறி நிற்கும் போது...

மாற்று மதத்தவருக்கு என்ன மந்திர சக்தியாலா நேர்வழியைப் பெற்றுக் கொடுக்கப்பார்க்கின்றனர்?

இஸ்லாத்தின் கொள்கை தொடர்பாக முஸ்லிம்களுக்கள்ளேயே நூற்றுக் கணக்கான பிளவுகளையும், பிரிவுகளையும் வைத்துக்கொண்டு அந்நிய மதத்தினருக்கு இப்படி ஒரு அழைப்பு தேவைதானா?

தௌஹீது பேசித்திரிபவர்களே பல பிரிவுகளாய் பிரிந்து வாய்ச்சணடையிலும், நாய்ச்சண்டையிலும் சிக்கி சமூகம் நாறிக்கொண்டிருக்கும் போது அந்நிய மதத்தினருக்கு இஸ்லாத்தை எத்திவைக்க யாருக்கு அருகதை இருக்கிறது.

ஊருக்கு ஒரு விஹாரை என்று ஒற்றுமையாய் இருக்கும் அவர்களுக்கு, வீதிக்கு பல பள்ளிகளைக் கட்டிக்கொண்டு அடி தடி சச்சரவுகளில் சன்மார்க்கம் பேசுபவனால் சரியான வழிகாட்டல் யாருக்குக் கிடைக்கும்?

சிங்கள மக்களுக்கு இஸ்லாத்தைச் சொல்ல
அரபுப் பணத்திற்கு என்ன அருகதை இருக்கிறது?

பணிப்பெண்ணாய் சஊதி சென்று கண்ணீரோடும், காயத்தோடும் நாடு திரும்பி நிர்க்கதியான சிங்களவர் எத்தனைப் பேர்?


இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள சமூகம் அரபு நாடுகளோடு தொடர்புள்ள சமூகம். அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்று வருகிறார்கள். பல பெண்கள் சஊதி போன்ற நாடுகளில் தொழில் செய்யப் போய் அரபிகளால் கற்பழிக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு, ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாமல், முடமாக்கப்பட்டு தாய் நாடு திரும்புகிறார்கள்.

சிலர் படுகொலைசெய்யப்பட்டு சவப்பெட்டிகளில் சீல் வைத்து அடைக்கப்பட்டு சடலமாக வருகிறார்கள்.

மனித நேயமில்லாத சஊதியின் போலி இஸ்லாத்தை மாற்று மதத்தவர் மாத்திரமல்ல. ஈமான் உள்ள எவனாவது ஏற்பானா?

மனிதநேயம் இல்லாதவர்கள் வாழும் நாடு , இந்த வஹ்ஹாபி மன்னர்கள் ஆளும் நாடு என்பதை சிங்கள மக்களில் அனேகம் பேர் உணர்ந்திருக்கின்றார்கள்.

அநீதி அக்கிரமம் இழைக்கப்பட்ட வீட்டுப்பணிப்பெண்களுக்கு ஆதரவாக மனிதநேயமற்ற இந்த சஊதி மன்னராட்சி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. தனது நாட்டுக்கு வரும் மனித ஜீவன்களை மிருகத்தை விட கொடுமையான முறையில் நடாத்தும் இவர்கள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இஸ்லாமிய பிரசாரம் புரிய பணம் வழங்குகிறார்கள். பள்ளிவாசல் கட்டிக்கொடுக்கின்றார்கள்.

தன்னிடமில்லாத இஸ்லாத்தை இவர்கள் ஏன் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். சஊதியில் இஸ்லாத்தை வளர்க்க இவர்களால் ஏன் முடியாது?
அதை விடுங்கள்! தனது ஆப்த நண்பனான அமெரிக்காவிற்கு இந்த ஏகத்துவ அழைப்பை விடுக்காமல் சஊதி ஏன் மௌனமாய் இருக்கிறது?

அதில் தான் இரகசியம் இருக்கிறது.

மூன்று தசாப்தங்களாக இரண்டு இனங்களுக்கிடையில் யுத்தம் வெடித்து பலத்த உயிர் உடைமை இழப்பிற்கு பிறகு நாடு நிம்மதியடைந்திருக்கிறது.

முஸ்லிம்களோடு ஒரு முறுகல் நிலையை தோற்றுவிப்பதன் மூலம் மற்றுமொரு ஆயுத விற்பனைக்கான சந்தையை இலங்கையில் உருவாக்க சஊதி வழிசெய்கிறது. அமெரிக்காவிற்கு ஆயுத சந்தையை தயார் படுத்திக் கொடுப்பதில் கடந்த காலங்களில் சஊதிக்கு நிறைய பங்கு இருந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அது ஆரம்பித்த ஜிஹாத் இதற்கு சிறந்த சான்று! கல்வியறிவில்லாத ஆபகான் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி இந்த நாட்டை ரணகளமாக்கிய பெருமை சஊதிக்கும், சீ.ஐ.ஏ இற்கும், பாகிஸ்தானுக்கும், உரித்தானது.

அன்று சஊதி பணத்தில் இயங்கும் இஸ்லாமிய (தஃவா?) இயக்கங்கள் வாஷிங்டன் வழங்கிய ஜிஹாத் பத்வாவை வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்தன.

சமகால முஸ்லிம் உலகின் மீதான அமெரிக்க, மேற்கத்தைய நெருக்குதல்களுக்கு ஆப்கான் ஜிஹாத் களம் அடிப்படையாக மாறியது.

இஸ்லாத்திற்கும் ஆயுதத்திற்கும் இரத்தத்திற்கும் ஒரு தொடர்பை அமெரிக்க சஊதி கூட்டு அரசியல் ஏற்படுத்தி வருகிறது.

பலிகடாவான முஸ்லிம் உம்மத் பரிதவித்து நிற்கிறது.

இலங்கை.. இஸ்லாம்..இரத்தம்
சர்வதேச அரங்கில் நாளைய செய்தி இதுவாக முன், எழுவீர்!
எதிரியின் ந்ண்பன் எதிரியே ஆவான்!

No comments:

Post a Comment